அன்பு பொன்சுதாவிற்கு
நேற்று(14.08.2009) பார்த்த பொக்கிஷம் மனதை பாதிக்கிறது
நீங்கள் சொல்லிய "ரிதம் இல்லை என்று" - technical லாக இல்லை என்றாலும்
"நீ எனக்கு எழுதிய காதல் கடிதங்கள்" - பொக்கிஷம் என்ற தலைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சேரன் எடுத்துள்ளார் என்றே எனக்கு தோன்றுகிறது.
1975 க்கு முன் பிறந்து கடிதங்கள் எழுதி உறவுத் தொடர்புகளை (காதல் உறவுகளை மட்டும் அல்லாமல் மற்ற உறவுகளையும் தான்) வளர்த்தவர்களுக்கு மட்டுமே இந்த படம் பொக்கிஷமாக தெரியும். ஏன் எனில் எங்கள் வீட்டிலும் இது போன்ற பொக்கிஷங்கள் உள்ளன. மாதிரிக்கு ஒன்று: நான் பிறந்த 18.01.1962 அன்று என் தந்தை தன் தம்பிக்கு அஞ்சல் அட்டையில் இப்படி எழுதியுள்ளார்: " இன்று தேமொழிக்கு தம்பி பிறந்துள்ளான். தாயும் சேயும் நலம்." இரண்டு வரிதான்; "எனக்கு நீ தம்பி போல தேமொழிக்கு தம்பி" என்று தம்பியின் உறவை முக்கியப்படுத்தி எழுதி உள்ளார். இந்த Post Card ஐ இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன். நான் எழுதிய கடிதங்கள் பல நூறை தாண்டும்; எனக்கு வந்த கடிதங்களும் பல நூறை தாண்டும்; அதில் சில நூறை இன்னும் வைத்துள்ளேன்.
இந்த படத்திற்காக சேரன் எழுதிய டைரி குறிப்புகள் மற்றும் கடிதங்களில் ஒரு 10% மட்டும்தான் படமாக்கத்திற்கு பயன்படுத்தியிருப்பார் என்று நம்புகிறேன். மிகுதியை படமாக்க முடியவில்லையே என்று அவர் நிச்சயம் வருந்தியிருப்பார்; மிகுதியை தெரிந்து கொள்ள முடியவில்லையே (பார்க்கவோ படிக்கவோ) என்ற ஏக்கம் எனக்கு உள்ளது. எனவே அவை முழுவதையும் நூலாக கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். படம் சம்பாதிக்காதத்தை புத்தகம் சம்பாதிக்கும்.
படத்தில் வந்த "குரங்கும் பிசாசும்" கடிதங்களும் டைரி குறிப்புகளும் உணர்த்திய மாசற்ற காதலை தாமதமாக புரிந்து கொண்டதை போல் படம் பார்க்க பாதியில் வந்து சடுதியில் போன "குரங்குகளும் பிசாசுகளும்", அரங்கு (முதல் நாள் இரண்டாம் காட்சியிலேயே) நிறையாததால் அவசர காமக்காதல் பண்ணிய நாய்களும் என்றாவது ஒரு நாள் முதல்மக்கள் (past generation) அனுபவித்த விலை கொடுத்தாலும் கிடைக்காத உன்னத உணர்வுகளை புரிந்து கொள்வார்கள் என்று நம்புவோமாக.
குறைகள் ஒரு சில இருந்தாலும் பழைய பொக்கிஷ நினைவுகளை இந்த படம் நிச்சயம் பல சிலரிடம் தட்டி எழுப்பும்.
அதுவே படத்திற்கு கிடைத்த வெற்றி.
முக்கிய நீரோட்டம் (main stream) கெடாதவாறு எந்த காட்சியையும் மறுபடமாக்காமல் சில காட்சிகளை நீக்கி சில புதிய காட்சிகளை சேர்த்தால் எல்லா மக்களையும் இந்த படம் சென்றடைய வாய்ப்பிருக்கிறது. இன்னும் இருமுறை "பொக்கிஷம்" பார்த்தால் அதற்கான ஆலோசனைகளை என்னாலேயே கொடுக்க முடியும்.
சேரனின் முந்தைய படங்களைப் பார்த்துள்ளேன்; "டூரிங் டாக்கீஸ்" படித்துள்ளேன். திரு. அவை நாயகன் உங்களது "நடந்த கதை" குறும்பட அறிமுக விழாவில் உங்களில் உள்ள படம் பண்ணும் "அடங்காத ஆர்வம்" பற்றி குறிப்பிட்டுள்ளதைப் போல் சேரனுக்கும் அந்த ஆர்வம் இன்னும் அடங்கவில்லை என்றே இந்த "பொக்கிஷம்" உணர்த்துகிறது. இதுவரை சேரனை நேரில் சந்திக்க ஆவல் எழுந்ததில்லை; இந்த படம் பார்த்த பிறகு அவரை சந்திக்க ஆவலாய் உள்ளேன். அதே "நடந்த கதை" குறும்பட அறிமுக விழாவில் இயக்குனர் திரு.சசி குறிப்பிட்ட நான்கு வித இயக்குனர்களில் சேரன் "தனக்கு பிடித்த கதையை தனக்கு பிடித்த மாதிரி படம் பண்ணும் இயக்குனர்கள்" வகையை சேர்ந்தவர் என்பது மறுபடியும் நிரூபணமாகிறது.
கடிதங்களையும் டைரி குறிப்புகளையும் காதல் காவியமாக உணர்வுமிக்க ஆவணமாக காட்டிய சேரனின் இந்த படத்தை "பெரும் குறும்படம்" என்று வகைப்படுத்தலாம்.
முதல் நாள் அரங்கு நிறையாதலால் படம் "commericial hit" ஆகாது என்றே நாம் பேசினோம். முதல் வாரத்தில் ஓடாமல் அதற்கப்புறம் வெற்றிப்படமாக மாறிய படங்கள் எல்லாம் கடந்த காலத்தில் உள்ளது. அதுபோல் இந்த "பொக்கிஷமும்" வெற்றிப்பெற்றால் அதற்கு இரு காரணங்களைத்தான் கூற முடியும்: 1. ஊடகங்களின் ஊக்கம் (media focus) 2. சேரனின் உறுதியான நம்பிக்கை (படம் எடுக்கும் முன் படம் எடுத்த பின் - இரண்டையும்தான்).
இயக்கும் இயக்குனர்களால் எதிர்பார்ப்பு கூடும் படங்களை ("நான் கடவுள்" மற்றும் "பொக்கிஷம்") உங்களோடு முதல் நாளே பார்த்ததில் எனக்கு "மகிழ்ச்சி" உங்களுக்கு என் "நன்றி".
அன்புடன்
பொன்னிவளவன்
சென்னை
15.08.2009
கைப்பேசி: 94444 01555
பிற்சேர்க்கை:
சேரனின் இ-மெயில் முகவரி தங்களிடம் இருந்தால் தரவும்; இந்த மெயிலின் பதிவை அவருக்கு அனுப்பலாம் என்று உள்ளேன்.